பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்-12ம் தேதி வரை மலையேற அனுமதி

வத்திராயிருப்பு : பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு, நேற்று முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.கேட் திறக்கப்பட்டு வனத்துறை சோதனைக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பிரதோஷம் என்பதால் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிசேகங்கள் நடைபெற்றது. அபிசேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.நாளை தை அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: