காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக மீனவ மக்கள் பகுதியில் கருத்துகேட்பு கூட்டம் நடத்த கோரி வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய மீன்பிடிப்போர் சங்கத்தின் தலைவர்  எத்திராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி  தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவர்களிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, கருத்துகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அரங்கன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல் போகும்.

எனவே, கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே நடத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 6 வாரங்களில் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.

Related Stories: