சென்னை: கொரோனா பிரச்னையால் 10 மாத இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 8ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணை தொடங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை ஆகியவற்றில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பிப்ரவரி 8ம் தேதி முதல் வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் விரும்பினால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம். நேரடி வழக்கு விசாரணையை பொறுத்தவரை இறுதி விசாரணை வழக்குகள் மட்டுமே காலை மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும். மற்ற வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே நடைபெறும்.