தடுப்புச்சுவர் கட்ட வேண்டாம்: விவசாயிகளுடன் உறவை மேம்படுத்த பாலங்களை கட்டுங்கள்: ராகுல் காந்தி டுவிட்.!!!

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் 12 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.இந்த நிலையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறையாக மாறியது. இதில் விவசாயி ஒருவர் உயிரிந்தார்.

இந்த நிலையில் டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிபூர், திக்ரி, சிங்கு சாலைகளுக்கு குறுக்கே இரும்பு ஆணி தடுப்புகளையும், கான்கிரீட் தடுப்புகளையும் டெல்லி போலீஸ் அமைத்துள்ளது. குறிப்பாக திக்ரியில், போராட்ட களத்தில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் சாலைகளில் முதலில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளும் அதைத் தொடர்ந்து இரண்டு கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.கான்கிரீட் தடுப்புகளுக்கு இடையே சிமென்ட் கலவை போடப்பட்டு விவசாயிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கான்கிரீட் தடுப்புகள் மற்றும் இரும்பு ஆணி தடுப்புகளின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பதிவிட்டு, விவசாயிகளுடன் உறவை மேம்படுத்த பாலங்களை கட்டுங்கள், உறவை தவிர்க்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டாம் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: