காலி மருத்துவ இடங்களுக்கு நாளைக்குள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம்: மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் அறிவிப்பு

சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான பல எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அதன் காரணமாக 2020 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டு வாழ் இந்திய  மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (30ம் தேதி)  தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். கடந்த 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நிர்வாகப் பிரிவில் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு தகுதியுடையவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: