ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? : தமிழக அரசு மீது கமல்ஹாசன் தாக்கு!!

சென்னை : குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் ஜனவரி 26 (குடியரசு தினம்), 2. மே 1 (உழைப்பாளர் தினம்), 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்). 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மேற்கண்ட் நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மே 1ம் தேதி நடைபெற வேண்டிய கூட்டமும், ஆகஸ்ட் 15 நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டமும், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கூட்டமும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது?” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: