சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்

சென்னை: ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் வசித்து வந்தார். அந்த வீட்டில் இருந்தபோதுதான் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி 75 நாள் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலன் அளிக்காமல் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 2017ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி, வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வருகிற 28ம் தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். திறப்பு விழா முடிந்ததும், பொதுமக்கள் பார்வையிட தினசரி அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நாளை (27ம் தேதி) ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்.

பொருட்களின் விவரம்

ஜெயலலிதா வீடு 10 கிரவுண்டு பரப்பளவு மற்றும் 3  மாடிகளை கொண்டது. இந்த இல்லத்தில் 32,721 பொருட்கள் இடம் பெற்றுள்ளது.  இதில் 8,376 புத்தகங்கள், 394 நினைவு பரிசுகள் ஆகும். 4.372 கிலோ தங்க பொருட்கள், 601 கிலோ வெள்ளி பொருட்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: