தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது மேலும் 4 பேரை இலங்கை அரசு கொலை செய்துள்ளது.