சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி..! விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்

பெங்களூரு: சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி என பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு தற்போது சிறைத்தண்டனை முடியவுள்ளது. சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாவார் என்று சொல்லப்பட்ட நிலையில் திடீர் உடல் நலகுறைவால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதேபோல் அவர் தற்போது முறையாக உணவு உட்கொள்வதாகவும், எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சசிகலாவின் உடல்நல குறைவால் அவர் ஜனவரி 27 இல் சொன்னபடி விடுதலை செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

சசிகலாவின் விடுதலையை தாமதப்படுத்த சிறைத்துறை முயற்சி செய்வதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா ஜனவரி 27 இல் விடுதலையாவது உறுதியாகியுள்ளது. சிறைக்கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஜனவரி 27 இல் மருத்துவமனையில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று சிறைத்துறை முறையாக விடுவிக்க உள்ளதாக கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: