சென்னை: தனியார் ரயில்கள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் 16 ஜோடி ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி- லக்னோ, அகமாதபாத்- மும்பை இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த இரண்டு வழிதடத்தில் இயக்கப்படும் ரயில்கள் லாபத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு 6 ஜோடி ரயில்களும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு 4 ஜோடி ரயில்களும், தமிழகத்தில் 6 ஜோடி ரயில்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 152 ஜோடி வழிதடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 12 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மையத்தில் 14 ஜோடி தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளன. இதில் 13 ஜோடி ரயில்கள் தமிழகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஹவுரா மையத்தில் இருந்து சென்னைக்கு 1 ரயிலும், செகந்தராபாத் மையத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு இரண்டு ரயில்களும் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி இடையே இந்த ரயில்களை தனியார் இயக்குவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.