ரூ.28 ஆயிரம் கோடி பரஸ்பர நிதி மோசடி பணத்தை மீட்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராங்க்ளின் டெம்பில்டன் அசட் மேனேஜ்மென்ட் எனும் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) திட்டங்களை வழங்கி வந்தது. கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், ஆறு பரஸ்பர நிதிய திட்டங்களை முடித்துக் கொண்டதாக 2020 ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம், நாடு முழுவதும் 3 லட்சத்து 15 ஆயிரத்து 621 முதலீட்டாளர்களிடம் இருந்து 28 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக கூறி, கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், பொருளாதார குற்றப் பிரிவினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி, பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பரஸ்பர நிதி சரியானது என கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோர் விளம்பர பிரதிநிதிகளாக விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பொருளாதார குற்ற பிரிவு துவங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதியப்பட்டன, எத்தனை வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது என அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்.

முதலீட்டாளர்களின் நலன் காக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்தும், முதலீட்டாளர்களின் பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, டி.ஜி.பி மற்றும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

Related Stories: