பால் தினகரன் குழுமத்தில் 5 கிலோ தங்க கட்டிகள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்: நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்

கோவை: பால் தினகரன் குழுமத்தில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக நடத்திய சோதனையில் 5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 20ம் தேதி முதல் 3 நாட்களாக சோதனை நடத்தினர். கோவையில் அவருக்கு சொந்தமான காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல், காருண்யா பல்கலைகழகம், ஜெபக்கூடம், இயேசு அழைக்கிறார் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் 5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறையினர் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் விடுதியிலிருந்து 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமானத்திலிருந்து சில பகுதியை சேமிக்க தங்கக் கட்டிகளாக மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. ரூ.100 கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடு நடந்துள்ளது. ஆனால், இதற்கு, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவில்லை. எனவே அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அடுத்த வாரம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பால் தினகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: