ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் வாகன விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி: சிறுவன் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி மீது உரசி சென்ற பைக், தனியார் பஸ் மோதியதில்  நண்பர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர்  அருகே ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை நந்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கந்தன் (18). பிளஸ் 2 படித்துள்ளார்.  அதே பகுதி மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பார்த்திபன் (18). பிளஸ் 1  படித்துள்ளார்.  சீனிவாசன் என்பவரது பாலாஜி (16). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று மாலை நண்பர்கள் 3 பேரும், வல்லக்கோட்டையில் இருந்து ஒரகடம் நோக்கி பைக்கில் புறப்பட்டனர். பெரும்புதூர் - சிங்கபெருமாள் கோயில் சாலை  மாத்தூர் அருகே சென்றபோது, முன்னால் மினிலாரி மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தது. அதன் இடையே முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது, லாரியில் பைக் உரசி, நிலை தடுமாறி தறிக்கெட்டு ஓடிய பைக், பஸ் மீது மோதி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் கந்தன், பார்த்திபன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாலாஜிக்கு கால் முறிந்தது.தகவலறிந்து  ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த பாலாஜியை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் சடலங்களை கைப்பற்றி,  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 2 பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: