சென்னை: புதுச்சேரியை சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. ஒரே நாடு, ஒரே மெரிட் என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016ல் நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தை பாதிக்கும். தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.