மதுரை: அரசு மினி கிளினிக்குகளுக்கு தனியார் அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி வாதாடுகையில், ‘‘கொரோனா தொற்று காலத்தில் தற்காலிக ஏற்பாடாக ஓராண்டுக்கு மட்டும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவத்துறைக்கான நியமனம் அனைத்தும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமே மேற்ெகாள்ளப்படும். அவசர காலத்தை கருத்தில் கொண்டே தற்காலிக நியமனம் நடந்தது’’ என்றார். வக்கீல் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் பணிநியமனங்கள் நடந்து வருகிறது. இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.