இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது..! டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி கூட்டு முயற்சியால் இறுதி டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்தது.

இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தலைவர்கள், வீரர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது; அற்புதமான டெஸ்ட் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். அனைத்து வீரர்களும் பங்களித்ததன் மூலம், அணியாய் இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவத்தை இறுதிப் போட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எடுத்துரைத்திருக்கிறது. நமது இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

Related Stories: