கொரோனா தடுப்பூசி..! தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை: மேலும் 5 லட்சம் தடுப்பூசி நாளை வருகை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்தியா முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பார்வையிட்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேசியதாவது; கொரோனா தடுப்பூசிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பொங்கல் விடுமுறை என்பதால் முதல் இரண்டு நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. சில மாநிலங்களில் எல்லா நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தொய்வின்றி வாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்துக்கு கூடுதலாக 5,08,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை வர உள்ளன. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து அடுத்த பிரிவு முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 1,07,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 70,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பதிவு செய்யப்பட்டனர். கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றும் தெரிவித்தார்.

Related Stories: