சென்னை: சென்னை முகப்பேரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஆயுதப்படை காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மற்றொரு காவலரும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயுதப்படை காவலர்களான ரவீந்திரன், கார்த்திக் ஆகியோர் ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். முகப்பேறு அருகே வளைவில் திரும்பும் போது அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரு காவலர்களில் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.