நெல்லை: பாளை செந்தில்நகர் பகுதியில் வெட்டுவான்குளத்திற்கான ஓடை செல்லும் வழியில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டன. அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்பட்டு வரும் சூழலில், கோழிகள், காகங்கள் உள்ளிட்ட பறவைகள் திடீரென இறந்து கிடந்தன. பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பறவைகள் செத்து மடிவதற்கான காரணம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முகம்மது காலித் அறிவுறுத்தலின் பேரில், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ், கால்நடை மருத்துவர் பாபு மற்றும் உதவி மருத்துவர் பொன்மணி ஆகியோர் அடங்கிய குழு செந்தில்நகர் பகுதியில் முழுமையாக ஆய்வு நடத்தியது. அங்கு கோழிகள் வளர்க்கும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.