சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. அரசு, தனியார் மற்றும் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான கணக்கெடுப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறன்றர். இந்த கணக்கெடுப்பின் போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சில சுகாதார பணியாளர்கள் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிப்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களின் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் அல்லாத மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குள் என்று அனைத்து மருத்துவமனைகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் சில தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி அளிக்க முடியாது. தற்போது வரை 4.5 லட்சம் பணியாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.