முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் சென்னையில் போராட்டம்: வைகோ உள்ளிட்ட 300 பேர் கைது

சென்னை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. லயோலா கல்லூரி அருகே வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பேரணியாக, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்றபோது நடுவழியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related Stories: