மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே உடையான்திட்டு கிராமத்தில் இறந்தவர் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல்வழியே தூக்கிச் சென்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குப் பின்புறம் உள்ளது உடையான்திட்டு என்ற சிறு கிராமம், இதில் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
உடையான்திட்டில் வசிப்பவர்களில் யாராவது இறந்துபோனால் அவர்களின் உடலை 500மீ தூரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு வயல்வெளிப் பகுதியில் சென்றுவருவது வாடிக்கை. வயல் பகுதியில் வரப்பு பெரிய அளவில் இருந்ததால் எந்த தொந்தரவும் இன்றி சடலத்தை தூக்கிச்சென்று இறுதி அடக்கம் செய்துவந்தனர். பல ஆண்டுகளாக வரப்பும் சுருங்கிவிட்டது. இதனால் வரப்பில் செல்ல இயலவில்லை. இதுகுறித்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கடந்த 8ம்தேதி உடையான்திட்டை சேர்ந்த மணியன் (88) என்ற முதியவர் இறந்து விட்டார். அவரது உடலை நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதி மக்கள் 500 மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டிற்கு விவசாய வயலில் சேற்றில் இறங்கி சுமந்து சென்றனர். உடனடியாக அரசு அதிகாரிகள் உடையான்திட்டு பகுதிக்குச் நேரில் சென்று விசாரணை நடத்தி சுடுகாட்டுப் பாதையை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.