கம்பம்: கம்பத்தில் ஹைடெசிபலில் காதை கிழிக்கும் வகையில் ஏர்ஹாரன்களை ஒலிக்கும் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வாகனங்களில் குறிப்பிட்ட ‘டெசிபல்’ அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் ‘ஏர்ஹாரன்’களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், இந்த வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி, ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றன. குறிப்பாக நகரப்பகுதிக்குள் நுழையும் தனியார் பஸ்கள், அதிக வேகத்தில் செல்வதுடன், தொடர்ச்சியாக ஏர்ஹாரன்களை அலறவிட்டு பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.