மாநிலத்தில் பாஜ ஆட்சியில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜன.5: பெங்களூரு மட்டும் இன்றி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம்  தலைவிரித்து ஆடுகிறது  என காங்கிரஸ் தலைவர்  டிகே சிவகுமார் கூறினார்.பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் மாவட்ட காங்கிரஸ்  கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக நடந்த கூட்டத்தில் மாநில  காங்கிரஸ் தலைவர் டிகே  சிவகுமார் பங்கேற்று பேசியதாவது: பெங்களூரு மட்டும் இன்றி மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம்  தலைவிரித்து ஆடுகிறது. அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றால் அதற்கு கூட லஞ்சம் தரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்கு இவ்வளவு லஞ்சம் தரவேண்டும் என்பது  எழுதாத சட்டம் போல்  அனைத்து அலுவலகத்திலும் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

2021ம் ஆண்டில்  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது ஆகிய இரண்டு  கொள்கையுடன் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகளின் தோல்விகள், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மாநில அரசு என்ன பதில் கூறமுடியும்? கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 800 ஆக இருக்கும் நிலையில் மாநில அரசு 10 ஆயிரம் படுக்கை  வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் தவிர மற்ற படுக்கைகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் பயன்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பின் வாசல் வழியாக முதல்வர் எடியூரப்பா ஆட்சியை பிடித்துள்ளார். பாஜவின் முறைகேடுகளை மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கட்சியை பலப்படுத்தி காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம். மாநிலத்தில் உள்ள 150 பேரவை தொகுதிகளை  தேர்வு செய்து அங்குள்ள குறைகளை கேட்டறிந்து, அதை சரிசெய்து கொடுக்க மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

Related Stories: