கேரளாவில் நாளை கல்லூரிகள் திறப்பு: ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளைமுதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறந்து செயல்படுகின்றன. கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன் 1-ம் தேதி முதல் கல்வி ஆண்டுக்கான ஆன்-லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 10, 12ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ல் தொடங்கி 30-ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறந்து செயல்படுகின்றன. ஆனாலும் ஒருசில பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.

இதேபோல கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஜனவரி 4ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 4ம் தேதி முதல் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகள், சட்டம், இசை, நுண்கலை, பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்குகின்றன.

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் உண்டு. அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலை 8:30 முதல் மாலை 5 மணிவரை செயல்பட வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு மட்டுமே. தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம். கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வந்து வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் விடுதிகள் சுத்தப்படுத்தி, ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமைகளில் கல்லூரிகளை திறப்பதற்க பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஒருநாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: