ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் கொரோனா குறித்து செய்தி வெளியிட்ட குறைந்தது 57 ஊடகத்துறையினர் மீது கைது நடவடிக்கை,  முதல் தகவலறிக்கை, தாக்குதல்கள், வீட்டின் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.  குறிப்பாக, பாஜ ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.  கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் விதமாக ஒருபுறம் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைவது, இன்னொருபுறம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல் தொடுப்பது, இவற்றுக்கும் மேலாக கௌரி லங்கேஷ் போன்று நேர்மையான பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்வது என்ற மும்முனைத் தாக்குதலை பாஜ, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தொடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது பாசிச கும்பல் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க அதிமுக அரசு முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: