வீட்டுமனை பட்டா வழங்குவதில் மோசடி அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்: தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த கொங்கர்பாளையத்தில் 83 பயனாளிகளுக்கு அரசின் சார்பில் நேற்று இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் செங்கோட்டையன் வழங்குவதாகவும், ரூ.1.25 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், ஏற்கனவே வீட்டுமனை பெற்றவர்களுக்கே மீண்டும் வீட்டுமனை வழங்கப்படுவதாகவும், இதுவரை தங்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை எனவும் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்கள் நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி முன்பு நேற்று திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக மனு அளித்தும் தங்களுக்கு பட்டா வழங்காமல் ஏற்கனவே பட்டா பெற்றவர்களுக்கு மீண்டும் பட்டா வழங்கினால் தீக்குளிப்போம் என அந்த பெண்கள் கோஷமிட்டனர்.  அவர்களை சமாதானம் செய்ய வந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை பெண்கள் முற்றுகையிட்டனர். அப்ேபாது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் காரில், பள்ளி முன்பு வந்து இறங்கினார்.  உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கு விரைந்து சென்று அமைச்சரையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: