எம்ஆர்சி நகர் நட்சத்திர ஓட்டல் பணியாளர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அனைத்து ஓட்டல்களிலும் பரிசோதனை தீவிரம்

சென்னை: எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் பணியாளர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் கொரோனா சோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் கடந்த 10 நாட்களாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த ஓட்டலில் பணியாற்றிய சமையல் கலைஞர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி 25 நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 இதில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் பணியாற்றும் 130 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இதில் 16 ேபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று சோதனை நடத்தி முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: