சூலூர் அருகே பிறந்து 4 நாளே ஆன குழந்தை சடலமாக சாலையோரம் மீட்பு: வீசிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை

சூலூர்: சூலூர் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் சடலத்தை  சாலையோரத்திலிருந்து போலீசார் மீட்டனர். குழந்தையின் உடலை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பிரிவு மேம்பாலம் அருகே சாலையோரம் பையில் சுற்றிய நிலையில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை அந்த பையில் சடலமாக இருந்தது தெரிந்தது.

குழந்தையின் கை, கால் ஊனமுற்ற நிலையில் இருந்தது. இந்த குழந்தையின் கையில் ஒரு பெண்ணின் பெயர் எழுதிய டோக்கன் கட்டப்பட்டு இருந்தது. கோவை அரசு மருத்துவமனையில் பிறந்ததற்கான டோக்கன் என அதில் எழுதப்பட்டிருந்தது. போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை சடலமாக சாலையோரம் வீசிச் சென்றது யார்? குழந்தை இறப்பிற்கான காரணம் என்ன? கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? அல்லது குழந்தை ஊனமாக பிறந்ததால் கொலை செய்து சாலையில் வீசி சென்றனரா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: