அடித்து இம்சித்தார் என குற்றச்சாட்டு மகளை வீட்டுச்சிறை பிடித்தாரா மாஜி அமைச்சர்? மகளிர் ஆணையம் தலையிட்டு மீட்டது

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையம் மீட்டு காப்பகம் அனுப்பியதை அடுத்து, மகளை வீட்டுச் சிறையில் வைத்தார் என மாநில முன்னாள் அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பஷ்சிம் விகார் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக 4 முறை தேர்வு செய்யப்பட்டவர் ராஜ்குமார் சவுகான். மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார். திருமணம் செய்து கொடுத்து 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள தனது மகளை வீட்டுச் சிறையில் வைத்தார் என சவுகான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெண் கூறியதாக மகளிர் ஆணையம் தெரிவித்த விவரம்:

மாநில மகளிர் ஆணையத்திற்கு கிடைத்த கடிதத்தில், பஷ்சிம் விகாரில் உள்ள வீட்டில் தந்தை சவுகான் என்னை சிறை பிடித்து வைத்துள்ளார். என்னை தயவு செய்து மீட்டுச் செல்லுங்கள் என கூறப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், உடனடியாக மீட்புக் குழுவினரை போலீஸ் துணையுடன் அனுப்பினார். அவர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு பஷ்சிம் விகார் காவல் நிலையத்தில் முறையான விசாரணைக்குப் பின்னர் காப்பகம் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மகளிர் ஆணையம் தரப்பில் கூறியிருப்பதாவது: சவுகான் தனது மகளுக்கு 1999ல் திருமணம் செய்தார். இரு குழந்தைகளுக்கு தாயான சவுகான் மகள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார். சண்டிகார் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கணவர் வேறு பெண்ணை திருமணமும் செய்துள்ளார். எனவே இந்த வழக்கு முடிவுக்கு வரக்கூடாது என திட்டமிட்டு, தந்தை தன்னை வீட்டிலேயே அடைத்து வைத்தார். மேலும் தந்தையும், சகோதரனும் என்னை அடித்து இம்சை செய்து வருகின்றனர்.

எனது இரு மகள்களையும் பார்க்க அனுமதிப்பதில்லை. கணவர் வேறு திருமணம் செய்ததால், நானும் புது வாழ்க்கை அமைத்து கொள்ள விரும்பினேன். கவுரவக் குறைவாக கருதிய தந்தை அதற்கு சம்மதிக்காமல், என்னை கொடுமை செய்து வருகிறார். எனது இளைய சகோதரியை கேளுங்கள். எனக்கு நடந்த கொடுமைகளை பட்டியல் இடுவார். இவ்வாறு பெண் கூறியதாக மகளிர் ஆணையம் தெரிவித்தது. பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசில் பெண் கூறியதை அடுத்து, விஷயத்தை தினசரி நாட்குறிப்பு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றனர். வலுவான அரசியல் பின்னணி காரணமாக எப்ஐஆர் பதிவு செய்வில்லையா என கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் எனவும் மகளிர் ஆணையமும் போலீசுக்கு வலியுறுத்தி உள்ளது.

* மகளுக்கு மன அழுத்தம்: சவுகான்

குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் சவுகான், திருமண முறிவுக்கு பின் எனது மகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். பஷ்சிம் விகார் பெரா என்கிளேவ் பகுதியில் உள்ள எனது வீட்டின் மாடியில் அவர் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். மன அழுத்தத்தில் இருந்த மகள், திங்களன்று எதேச்சையாக பிசிஆருக்கு போன் செய்துள்ளார். அவர்கள் உடனே மகளிர் ஆணைய குழுவினரையும் சேர்த்துக் கொண்டு இங்கு வந்து தனி குடும்பமாக இருந்த மகளை மீட்டுச் சென்றனர். நானோ அல்லது எனது குடும்பத்தினரோ அவரை கொடுமை செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

Related Stories: