இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 4ம் கட்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.  கிருஷ்ணாகுப்பம் சாலையிலிருந்து ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற மாபெரும் பேரணிக்கு பாமக மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சி.மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட பாமகவினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்ல முயன்றதால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினிடம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு வழங்கினர்.  பாமக திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: