மதுரை: மதுரை எய்ம்ஸ் அமையுமிடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக நிறைவுபெறும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைகான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறாதது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பினார். முதலீட்டுக்கு முந்தைய பணிகளான மண் பரிசோதனை மற்றும் இடம் தொடர்பான ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்திருப்பதாகவும் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடையும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.