புதுடெல்லி: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்து மீற முயன்றதால் கடந்த ஜூன் மாதம் இந்திய, சீன படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதிலிருந்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதேபோல், கொரோனா விவகாரத்தில் சீனாவை ஆஸ்திரேலியா கடுமையாக தாக்கிப் பேசியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது.இந்நிலையில், இந்திய மாலுமிகள், ஊழியர்கள் உள்ள 2 சரக்கு கப்பல்களை சீனா தனது துறைமுகத்தில் சிறை பிடித்து வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி எடுத்துச் சென்ற எம்வி அனஸ்டாசியா என்ற கப்பலில் 16 இந்திய மாலுமிகளும், எம்வி ஜாக் ஆனந்த் என்ற கப்பலில் 23 இந்திய மாலுமிகளும் உள்ளனர். இவ்விரு கப்பல்களையும் சீனா தனது துறைமுகத்தின் அருகே தடுத்து நிறுத்தி, சரக்குகளை இறக்க விடாமலும், கொரோனாவை காரணம் காட்டி மாலுமிகளை வெளியேறவோ திரும்பி செல்லவோ அனுமதிக்காமலும் முரண்டு பிடித்து வருகிறது.