நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி...200 பக்தர்களுக்கு அனுமதி

நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் 200 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. உலகப்புகழ்பெற்ற இந்த ஆலயம் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வமதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக  சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தினந்தோறும் வந்து செல்வார்கள். தற்போது கொரோனா காலமாக  இருப்பதால், பக்தர்கள் வருகை இல்லை.

பேராலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை (25ம் தேதி)  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

திருப்பலி முடிந்ததும் இயேசு பிறப்பு நிகழ்ச்சி தத்ரூபமாக காட்டப்பட உள்ளது. அதாவது இயேசு சொரூபத்தை தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளாரிடம் வழங்குகிறார். அவர் சொரூபத்தை பக்தர்களிடம் தூக்கி  காட்டி விட்டு, குடிலில் வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 200 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: