பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு பேபி கால்வாய் மூலம் அதிகமாக தண்ணீர் செல்ல நடவடிக்கை

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம். 3231 மில்லியன் கொள்ளளவு கொண்ட இந்த நீர்தேக்கத்ததில் கடந்த மாதத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு  வருகிறது.  பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் சோழவரம் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் மூலம் தற்போது 50 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு நீரை அதிகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு நீர் வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறு சீரமைப்பு கழக தலைவர் சத்தியகோபால், கலெக்டர்  பொன்னையா ஆகியோர் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து பேபி கால்வாய் வழியாக செல்லும் மாவூர், விளாப்பாக்கம் இராமராஜகண்டிகை வெள்ளியூர், தாமரைப்பாக்கம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, சோழவரம் பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர்.  

புயல், வெள்ளம் போன்ற காலங்களில் நீர் இருப்பு பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகமாகும் போது அதனை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரிக்கு அனுப்ப ஏதுவாக கால்வாய் பகுதிகள் சீரமைக்கப்பட்டு  ஆக்கிரமிப்புகள் இருந்தால் கட்டாயம் அகற்றப்படும். அப்போதுதான் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுபணித்திலகம், ஆரணியாறு செயற் பொறியாளர் ஜெயகுமாரி, திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: