டெல்லி : 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி அரசு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சட்டங்களின் நகலை சட்டமன்றத்திலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார் .மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு ஒரு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமின்றி ஒருசில மாநில விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கூடி 3 வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது அப்போது 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சட்டங்களை நாடாளுன்றத்தில் அவசரமாக நிறைவேற்றியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன் முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியதாக குற்றம்சாட்டினார். ஆங்கிலேயர்களை விட மோசமானதாக மத்திய அரசு மாறக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்த நிலையில், 3 வேளாண் சட்ட நகல்களை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.