பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்; வாலிபர் கல்லால் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூர் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான காலியிடத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பாவூர்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்ஐக்கள் கனகராஜ், கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. வெள்ளை நிறத்தில் சிவப்பு கட்டம் போட்ட சாரமும், வெள்ளையும், மஞ்சளும் கலந்த சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன.

உடல் அருகில் ரத்தம் தோய்ந்த கல் ஒன்று கிடந்தது. அவரது கையில் சாவித்திரி என பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது சட்டை காலரில் ‘கிங்ஸ்’ என்ற டெய்லர் கடையின் லேபிள் இருந்தது. அவர் வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்ட பின்னர் உடல் இங்கு வீசப்பட்டதா? அல்லது ஆவுடையானூரில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: