கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை: 2 மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே திண்டுக்கல் சாலையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தார். தகவறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த நபர் கருகி இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் கருகி உடல் கிடந்த இடத்திலிருந்து 20 அடி தூர சாலையோரத்தில் டிராவல்ஸ் வேன் ஒன்று அனாதையாக நின்றது. அந்த வேனின் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில், கருகி இறந்தவர் கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரை சேர்ந்த பாஸ்கரன்(42) என்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பாஸ்கரனுக்கு மனைவி சுதா(35), ஹரிணி(17), ஹரிவர்ஷினி(17) என்ற இரட்டையர் மகள்கள் உள்ளனர். பிளஸ் 2 முடித்துள்ள இவர்கள் இந்தாண்டு கல்லூரியில் சேர்ந்தனர்.

பாஸ்கரன் டிராவல்ஸ் வைத்துள்ளார். இவரே டிரைவராகவும் ஓட்டி வந்துள்ளார். கலெக்டர் அலுவலகம் அருகே 50 அடி தூரத்தில் நேற்றுமுன்தினம் இரவு வேனை நிறுத்திவிட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல இடங்களில் பாஸ்கரன் கடன் வாங்கி இருந்ததும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மகள்களுக்கும் கல்லூரி கட்டணம் செலுத்த பணமின்றியும் தவித்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்தது.

Related Stories: