ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை: மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் விபரீதம்

சென்னை: குடும்ப தகராறு காரணமாக மனைவி, தன் மகள்களுடன் கோபித்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை டாக்டர் ஒருவர் விஷஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அசோக் நகர் 62வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). டாக்டரான இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி திருவேணியும் தனியார் கண் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் திருவேணி கோபித்துக்கொண்டு, இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறிவிட்டு அருகில் உள்ள ஜோதிராமலிங்கம் தெருவில் உள்ள மாமனார் மதுரகவி வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால், கடந்த ஒரு வாரமாக வெங்கடேசன் மனமுடைந்த நிலையில் வீட்டின் தனியாக இருந்துள்ளார். வழக்கமாக, நேற்று காலை டாக்டர் வெங்கடேசனுக்கு அவரது மகள்கள், மனைவி, வெங்கடேசன் சகோதரன் ஆகியோர் போன் செய்துள்ளனர். வெகு நேரமாக எந்த அழைப்பையும் வெங்கடேசன் எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது சகோதரன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

பல முறை கதவை தட்டியும் கதவு திறக்காததால், குமரன்நகர் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேசன் இறந்த நிலையில் கிடந்தார். அவரது வலது கையில் விஷஊசி போட்ட நிலையில் ரத்த தழும்பு இருந்துள்ளது. ஊசியும் அருகில் கிடந்துள்ளது. இதையடுத்து, போலீசார் டாக்டர் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக அரசு டாக்டர் ஒருவர் தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: