தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கட்டுமானத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழக வேளாண்துறை சார்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த ஹரிஷ் என்ற 6 வயது சிறுவன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். தவறி விழுந்த சிறுவன் சிறிது நேரத்தில் பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டான்.