மும்பை: மும்பை அருகேயுள்ள மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ல் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை முன்னதாக விசாரித்த நீதிபதி பிஆர் சித்ரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜ எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாகூர் மற்றும் லெப்டினன்ட் பிரசாத் புரோகித் உள்ளிட்டோரை நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது.இதில் பிரக்யா தாகூர் மற்றும் 3 பேர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. 3 பேர் மட்டுமே நேற்று வழக்கு விசாரணையின்போது ஆஜராகினர். இதையடுத்து ஆஜராகாத குற்றவாளிகளின் வக்கீல்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி கூறுகையில் `கொரோனா தொற்று நிலவரம் காரணமாகவே தங்கள் கட்சியினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை’ என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து அனைத்து குற்றவாளிகளும் டிசம்பர் 19ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.