காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 545 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தின் முக்கியமான 16 ஏரிகளில் கணிசமான நீர் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக 909 ஏரிகள் உள்ளன. இதில் வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு உள்பட மொத்தம் 545 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல் 269 ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாகவும், 95 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும் நீர் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான தாமல் ஏரிக்கு கணிசமான நீர்வரத்தும், தென்னேரி ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி , மணிமங்கலம் ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் இந்தாண்டு விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.