மாற்றுத்திறனாளிகள் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாற்றுத் திறனாளிகள் காலத்தால் கைவிடப்பட்டவர்கள் அல்ல. சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களுடைய முன்னேற்றப் பாதையில் இருக்கிற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அனைத்து உரிமைகளும் பெற்றிட வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: அரசியல் அதிகாரத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இருக்கும் போதுதான் மாற்றங்கள் காலப்போக்கில் சாத்தியமாகும். எனவே, அமமுகவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அங்கீகாரமாக, அவர்களுக்கென்று சார்பு அணிகளில் தனியாக ‘மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு’ உருவாக்கப்படுகிறது. இதற்கான நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் சமூக, அரசியல் களத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புது எழுச்சி தரப்போகும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை சிறப்புக்குரிய இந்த நாளில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

Related Stories: