குன்னூர்: 8 மாதங்களுக்குப் பிறகு நீலகிரியில் மலை ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த, 8 மாதங்களாக நீலகிரியில் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.