கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடுகோரி போராட்டம்; பஸ், ரயில் மீது கல் வீசிய பாமகவினர்...!!

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 % சதவீத ஒதுக்கீட்டை வலியுறுத்தி, சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் பாமாகவினரை, சேலையூர் சரக உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாமாகவினார் திடீரென பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த வழியாக வந்த பேருந்துகள் மீதும் கல்வீசி தாக்கினர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் இருபுறத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு செல்லக்கூடியவர்கள் ஜி.எஸ்.டி சாலை வழியாக தான் பயணித்து வருகின்றனர்.

தற்போது பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் வார நாளான இன்று காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மீது அவர்கள் கற்களை வீசி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட பாமாகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: