சம்பளத்தில் ரூ.17 ஆயிரம் குறைக்கப்பட்ட விவகாரம் பொறியாளர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம், வேளாண்துறை, மீன்வளம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் போது அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அடிப்படை தர ஊதியம் ரூ.15,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஜூலை 22ம் தேதி அடிப்படை தர ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் போடப்பட்ட அரசாணைக்கு தடை விதித்தது. இதனால், மீண்டும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு நிர்ணயித்த ஊதியம் தரப்படும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் கடந்த 2013 அரசாணையின் போது அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம், உதவி செயற்பொறியாளர்களுக்கு 15,600-39100+5400, செயற்பொறியாளர்களுக்கு 15600-39100+6600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் ஊதிய விகிதம் பல மடங்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் எழுதினர்.

அதில், நாங்கள் ஏற்கனவே பெற்று வரும் ஊதியத்திற்கு இணையான புதிய ஊதிய விகிதங்களை வழங்க வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்பேரில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பொறியாளர்கள் மாநிலம் முழுவதும் இன்று முதல் மீண்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டம் டிசம்பர் 2ம் தேதி வரை தொடரும் என்றும், அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: