காஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் 3 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று நடத்திய அதிரடி சோதனையில் ₹3 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகில் கோட்ரம்பாளையம் நகர் ஊரமைப்பு (டிடிசிபி) அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குநராக கவிதா பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில், இடங்கள் விற்பனை மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற வேண்டும். இதனால் எப்போதும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அதிகளவில் காத்திருப்பார்கள். அவர்களிடம், டிடிசிபி அதிகாரிகள் ஒரு சதுரடிக்கு ஒரு ரூபாய் வீதம் கமிஷன் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ெதாடர்ந்து புகார்கள் சென்றன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், நேற்று மாலை, காஞ்சிபுரம் டிடிசிபி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அங்கு, துணை இயக்குநர் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வெளியில் செல்ல அனுமதிக்காமல், உள்ளேயே சிறை வைத்து, தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, ஒவ்வொரு அறையாக நடத்திய சோதனையில் 3.90 லட்சம் சிக்கியது. பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், இது கணக்கில் வராத பணம் என்பதால் லஞ்சமாக வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் 3.90 லட்சம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: