நந்தியாற்று வௌ்ளத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

திருத்தணி: நந்தியாற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருத்தணி நேரு நகரை சேர்ந்தவர் ரவி(70). நேற்று காலை நந்தி ஆற்றில் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இந்த வெள்ளத்தில் ரவி சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டு, ஆற்றின் நடுவில் இருந்த பெரிய பாறையின் மீது ஏறி அமர்ந்தார். பின், அங்கிருந்து தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அப்போது ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்க்க வந்த இளைஞர்கள், பொதுமக்கள் பார்த்தும் ரவியை காப்பாற்ற திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தங்கராஜ், ரவி, ராம்கி சரவணகுமார் ஆகியோர் கயிறு மூலம் முதியவர் ரவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

பின்னர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றின் நடுவில் இருந்த ரவியை லைப் ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி கயிறு மூலம் தங்கராஜ் ஆற்றங்கரைக்கு மீட்டு வந்தார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர். இதேபோல் தீயணைப்பு வீரர்கள், திருத்தணி ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த சாரைபாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories: