பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சென்னையில் மேலும் 2 ஒன்ஸ்டாப் சென்டர்கள்

சென்னை: குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களின் பிரச்னைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஒன்ஸ்டாப் சென்டரை உருவாக்கியது. பாதிக்கப்படும் பெண்கள் தங்குவதற்கு படுக்கை வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். அதன்படி, ஒவ்வொரு ஒன்ஸ்டாப் சென்டர்களிலும் ஒரு மனநல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர், சமையலர் உள்ளிட்ட 5 பேர் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில்  கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ‘ஒன்ஸ்டாப் சென்டர்கள்’ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கூடுதலாக இரண்டு ஒன்ஸ்டாப் சென்டர்களை அமைக்க சமூக நலத்துறை முடிவு செய்து அதற்கான கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து, சென்னையில் புதிய 2 ஒன்ஸ்டாப் சென்டர்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகம், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை வளாகம் ஆகிய 2 இடங்களில் ஒன் ஸ்டாப் சென்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: