தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் மழைநீர் புகுந்ததால் தண்டவாளம் இறங்கியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் - பென்சில் பேக்டரி இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.13 கோடி செலவில் தொடங்கப்பட்டது, பின்னர் பணி நிறுத்தப்பட்டது. அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 11ம் தேதி சுரங்கப்பாதை பணி நடந்தபோது திடீரென சாலை 12 அடி தூரத்திற்கு உள்ளே இறங்கியது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, நிவர் புயல் காரணமாக, கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணி நடக்கும் இடத்தில், மழைநீர் புகுந்து பணிகள் முற்றிலும் பாதித்தது.